தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த சோகம்.. ஆந்திராவில் லாரி - கார் மோதல்.. 4 பேர் உயிரிழப்பு
விஜயவாடா: ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதி மறுபக்க சாலைக்கு கார் சென்றது.

இதில் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி மோதியதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயத்துடன் துடித்துக்கொண்டிருந்த பெண் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான காரில் வந்தவர்கள் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
காயத்துடன் மீட்கப்பட்ட பெண் சத்யா என்றும் தெரியவந்துள்ளது. சுற்றுலா வந்த போது இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு இன்று ஆந்திராவுக்கு திரும்பிக்கொண்டிருந்த 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications