அதிமுகவில் அதிரடி நகர்வுகள்.. பெங்களூர் பறந்த தினகரன்... சசிகலாவுடன் சந்திப்பு
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை: பெங்களூர் சிறையில் உள்ள தனது சித்தி சசிகலாவை டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் இந்த நேரத்தில் டிடிவி தினகரன் நேற்று காலை திடீரென மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என்று மூன்றாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், ஓபிஎஸ் அணிக்கும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயார் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கட்சியை வழிநடத்த இரு அணிகளை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழுவின் தலைவராக ஓபிஎஸ் செயல்படுவார் என்றும், துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரன் மும்பை புறப்பட்டு சென்றது எடப்பாடி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் முக்கிய விஐபி ஒருவரை சந்திக்க தினகரன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மும்பையிலிருந்து டிடிவி தினகரன் பெங்களூருக்கு சென்றார். அங்கு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ் செல்வன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ஓபிஎஸ் தலைமையில் எழுபர் குழு அமைக்கப்பட்டுள்ளதால் அது பொதுச் செயலாளர் பதவியைக் காட்டிலும் பெரிய பதவி என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications