போட்டி போட்டுக் கொண்டு ராம் நாத்தை ஆதரிக்கும் அதிமுக.. பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸை அடுத்து தினகரனும் ஆதரவு
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தனது ஆதரவை அளித்துள்ளார் டிடிவி தினகரன்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. அதே போன்று போன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பழனிச்சாமி அணி ஆதரவு
இந்நிலையில் அதிமுக தங்களது அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழக முதல்வருக்கு தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து முதல்வர் பழனிச்சாமி ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக அறிவித்தார்.
ஓபிஎஸ் டீம்
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது. இதுகுறித்து ஓபிஎஸ், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டதை அடுத்து ராம்நாத்தை ஆதரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிடிவி டீம்
இதனையடுத்து, இன்று அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சசியின் ஆணைக்கிணங்க..
அதில் சசிகலாவின் ஆணைப்படி பாஜக வேட்பாளரை அதிமுக அம்மா அணி ஆதரிக்கிறது. அதிமுக அம்மா அணி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராம்நாத்துக்கு வாக்களிப்பார்கள். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ராம்நாத்திற்கு வாக்களிப்பார்கள் என்று தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் 3 அணிகளும் ராம் நாத் கோவிந்த்தை ஆதரித்துள்ளது. இதில் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் டெல்லி சென்று ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.