சுற்றிலும் சிஷ்யைகள்.. வீட்டில் 69,000 கருத்தடை மாத்திரைகள்! மத போதகருக்கு "8,685 ஆண்டு" சிறை தண்டனை
அங்காரா: துருக்கியில் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தது, இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியரும், சமய வழிபாட்டு தலைவருமான 'அட்னான் ஒக்டார்' என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8,685 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
ஏற்கெனவே இவருக்கு நீதிமன்றம் 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருந்தது. இந்நிலையில், அவர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த காரணத்தினால் ஒருவருக்கு 8,685 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது துருக்கி நாடு முழுவதும்.. இல்லை, இல்லை.. உலகம் முழுக்கவே, பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
திருடனுங்க.. திருடனுங்க.. கோயிலுக்கு வந்த அப்பாவி குடும்பத்தினர் மீது தாக்குதல் -சிறுமி கவலைக்கிடம்
மத அடிப்படைவாதி
66 வயதான 'அட்னான் ஒக்டார்' ஒரு சமய வழிபாட்டு தலைவராவார் (cult preacher). மட்டுமல்லாது துருக்கியில் A9 எனும் தொலைக்காட்சி சேனல் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் தனது சேனல் மூலம் சமய வழிபாட்டு முறைகள் குறித்து கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்துள்ளார். மேலும், 'சார்லஸ் டார்வினின்' பரிணாம கோட்பாட்டை கடுமையாக எதிர்த்தும் வந்துள்ளார். இதனால் அடிக்கடி இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும், பின்னர் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்து வந்திருக்கிறது. இவ்வாறு இருக்கையில், இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டு தொடர்ந்து குவியத் தொடங்கின.
செக்ஸ் டார்ச்சர்
அதாவது, இவர் எப்போதும் இளம் பெண்கள் சூழ உலகில் வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடன் இருக்கும் பெண்களை இவர் 'பூனை குட்டிகள்' என்று கூப்பிடுவாராம். இந்த விவகாரத்தில் பலரும் இவர் மீது விமர்சனம் வைத்தனர். சமய வழிபாட்டுக்கு தலைவருக்கு ஏன் இளம் பெண்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் இந்த கூட்டத்தில் இருந்த பெண்களில் ஒருவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்று இவர் மீது புகார் அளித்திருந்தார். புகாரில் இவர் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், சிறுமிகளையும் இவர் விட்டு வைப்பதில்லை என்றும் கூறியுள்ளார். இப்படியாக இவர் மீது மேலும் பல வழக்குகள் பதிவாகின.
கருத்தடை மாத்திரைகள்
இதனையடுத்து மேலும் சில பெண்கள் இவரது கட்டுப்பாட்டிலிருந்து தப்பி சென்று புகார் அளித்தனர். அதில், "நாங்கள் முதலில் சமய வழிபாட்டு முறையை பார்த்து ஈர்க்கப்பட்டோம். இது வித்தியாசமாக இருந்தது. அவரிடம் சென்ற பின்னர் எங்களது சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டது. இது எல்லாம் ஓரிரு நாட்களில் நடந்துவிடவில்லை. இது நடக்க ஓராண்டுகள் ஆனது. கடைசியாக எங்களுக்கு வேறு வழியே இருக்காது. நாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவோம். பின்னர் இவர் எங்களுக்கு இவர் கட்டாயப்படுத்தி கருத்தடை மாத்திரைகளை கொடுப்பார்" என்று கூறியுள்ளனர். இந்த சர்ச்சை பெரும் பிரச்னையாக வெடித்ததில் துருக்கி காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட அட்னான் ஒக்டாரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 69,000 கருத்தடை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைக் கண்டு அதிர்ந்த அந்நாட்டு காவல்துறையினர் அட்னான் ஒக்டாருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகளை தீவிரமாக்கினர்.
1,075 ஆண்டுகள் சிறை
அதிரடி ரெய்டில் பாதிக்கப்பட்ட பல சிறுமிகள், இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாது, தாங்க முடியாத உடல் ரீதியிலான கொடுமைகளையும் எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அட்னான் ஒக்டார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ராணுவ புரட்சி சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அடுக்கப்பட்டன. இதனையடுத்து வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் அட்னான் ஒக்டாருக்கு 1,075 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது. ஆனால் அட்னான் ஒக்டார் தன் மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்தார். எனவே தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்தார்.
8,685 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தது, இளம்பெண்களை பாலியல் வன்கொடுமையுடன் உடல் ரீதியிலான துன்புறுத்தல் செய்தது, அரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கையுடன் தொடர்பில் இருந்தது, ராணுவத்தில் உளவு பார்த்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகளில் அட்னான் ஒக்டார் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது. எனவே கீழமை நீதிமன்றம் விதித்த 1,075 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவருக்கு 8,685 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது. அதேபோல இவரது கூட்டாளிகளுக்கும் கடுமையான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் துருக்கி மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.