தமிழக முதல்வர் ஜெ. குறித்த அவதூறு கட்டுரை: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் மிகவும் அநாகரிமாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
ஷெனாலி டி. வடுகே என்பவர் எழுதியிருந்த அந்தக் கட்டுரைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே கடும் கண்டனம் தெரிவித்தன. பின்னர் இலங்கை அரசின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் கட்டுரை வெளியானதற்காக அந்த நாட்டு அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்தது.
ராஜ்யசபாவில் அமளி
இந்த நிலையில் ராஜ்யசபா இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
கட்டுரையின் நகல்..
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். பின்னர் சபை மீண்டும் கூடியபோது, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சபையின் நடுவே வந்து, சர்ச்சைக்குரிய கட்டுரையின் நகலை காண்பித்து முழக்கங்களை எழுப்பினர்.
அனுமதி மறுப்பு
அப்போது சபை தலைவர் ஹமீத் அன்சாரி, கேள்வி நேரத்தை இதுபோல வீணடிப்பது சரியல்ல. இருக்கைகளில் சென்று அமருங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டதால், மீண்டும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
தீர்மானம் கொண்டுவர வேண்டும்
பின்னர் மீண்டும் சபை கூடிய போது மைத்ரேயன் பேசுகையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் ஜெயலலிதா பற்றி வெளியிடப்பட்ட அவதூறு செய்தியானது தமிழக அரசை மட்டுமின்றி இந்திய அரசையே களங்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனியும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் ஒருமனதாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு கடும் கண்டனம்
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அ.தி.மு.க.வின் மைத்ரேயன் எழுப்பியுள்ள இந்த பிரச்சனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சம்பவத்துக்கு இந்தியா பலத்த கண்டனத்தை தெரிவிக்கின்றது. இவ்விகாரம் தொடர்பாக இலங்கையின் உயர் தூதரை அழைத்து அவரிடம் பேசுவோம் என்றார்.
வெங்கையா நாயுடு கருத்து
இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, இலங்கையின் இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை கண்டிக்க தயக்கம் காட்டக் கூடாது' என்று கூறினார்.
லோக்சபாவிலும்...
இதே பிரச்சினை லோக்சபாவிலும் எழுப்பப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தினார். தொடர்ந்து இலங்கை அதிபருக்கு எதிராக அதிமுகவினர் குரல் எழுப்பினர். இதனால் லோக்சபா நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications