ராதே மாவால் அடித்துக் கொண்ட விஐபிக்கள்... டிவி லைவ் ஷோவில் அரங்கேறிய கூத்து!
டெல்லி: சர்ச்சை சாமியார் ராதே மா குறித்த பேச்சால், டிவி நேரடி நிகழ்ச்சியில் பெண் ஒருவரும், ஆண் சாமியாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெண் சாமியாரான ராதே மா மீது வரதட்சணை வழக்கு உட்பட எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார் அவர்.
இந்நிலையில், ஐபிஎன் 7 என்ற தொலைக்காட்சியில் ஆஜ் கா முத்தா என்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், ஓம்ஜி என்ற இந்து மகா சபாவைச் சேர்ந்த ஆண் சாமியாரும், ராக்கி பாய் என்ற பெண் ஜோசியரும் கலந்து கொண்டனர்.
குற்றச்சாட்டு...
காரசாரமாக சென்ற விவாதத்தில் சர்ச்சை சாமியார் ராதே மா குறித்த பேச்சு எழுந்தது. அப்போது ராதே மா குறித்து ராக்கி பாய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆவேசமான ஓம்ஜி...
அதைக்கேட்டு ஆவேசமடைந்த ஓம்ஜி, ‘நீங்கள் எப்படி ராதே மா குறித்து பேசலாம். முதலில் உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்' எனக் கூறினார். அதோடு, சில வழக்குகள் குறித்தும் அவர் பேசத் தொடங்கினார்.
உங்களைச் சொல்லவில்லை...
இதனால் ஆத்திரமடைந்த ராக்கி பாய் அவருடன் கடுமையாக வாதிட்டார். அதற்கு ஓம்ஜி, நான் உங்களைச் சொல்லவில்லை. தீபா சர்மா என்பவரைப் பற்றித்தான் சொன்னேன் (அவரும் இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்) என்றார்.
எச்சரித்த தீபா சர்மா...
மேலும் தீபா சர்மா குறித்து தொடர்ந்தும் அவர் பேசத் தொடங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த தீபா சர்மா, டக்கென எழுந்து ஓம்ஜியிடம் வந்தார். அவரது முதுகைத் தட்டி அமைதியாக இருங்கள். இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் கூறினார்.
அடிதடி...
ஆனால் விடாமல் ஓம்ஜி பேசவே அவரை பளார் என ஒரு அறை விட்டார் தீபா சர்மா. இதனால் கொதிப்படைந்த ஓம்ஜியும் அவரை அடித்தார். அத்தோடு அவரது இரு கைககளையும் பிடித்து முறுக்குவது போல வைத்துக் கொண்டு கோபமாக அவருடன் வாதிட்டார்.
மக்கள் அதிர்ச்சி...
தொலைக்காட்சி வாயிலாக விவாத நிகழ்ச்சியை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்த மக்கள், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.