பிரச்சாரம் செய்ய பணம் கேட்டார் ராக்கி பிர்லா... தேர்தலில் விலகிய ஆம் ஆத்மி வேட்பாளர் பரபர புகார்
டெல்லி: மூத்தத் தலைவர் ஒருவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ரூ 7 லட்சம் கேட்டதாலேயே தாங்கள் தேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
தொடர்ந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கட்சியான ஆம் ஆத்மி, சமீபகாலமாக அக்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலரின் நடவடிக்கைகளால் சர்ச்சையில் சிக்கி வருகிறது.
அந்தவகையில், ‘ஆம் ஆத்மி' சார்பில் வடமேற்கு டெல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மகேந்தர் சிங். ஆனால், தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மகேந்தர். அதற்கான காரணமாக அவர் கூறியதாவது, ‘எனக்காக பிரசாரம் செய்ய கட்சியின் மூத்த பெண் தலைவரும், டெல்லி முன்னாள் அமைச்சருமான ராக்கி பிர்லாவை அணுகினேன். முதலில் அவர் மறுத்தார். பிறகு, அவர் ரூ.7 லட்சம் கேட்டார். இதுபற்றி அரசியல் விவகார குழு கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கட்சி மேலிடம் கூறியது. ஆனால் அப்படி செய்யவில்லை. எனவே, போட்டியில் இருந்து விலகுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதி ‘ஆம் ஆத்மி' வேட்பாளர் காலித் பர்வேஸ், தானும் போட்டிலியிருந்து நிர்ப்பந்தத்தின் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.