2008க்கு பிறகு முதல் முறையாக பண்டிட்டுகள் மீது தாக்குதல்... காஷ்மீரில் தொடரும் வன்முறை
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட்டுகள் வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர். 2008க்கு பிறகு இப்போதுதான் அதுபோன்ற ஒரு சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது என்பதால் கலவரம் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான அப்துல் புர்கான் வானி, சமீபத்தில் பாதுகாப்பு படையினரால் காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்டார். இவருக்கு ஆதரவான காஷ்மீர் மக்களின் ஒரு பிரிவினர், பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களை அடக்கி, கலவரத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், புல்வாமா பகுதியில், இந்து பண்டிட்களுக்கு சொந்தமான 2 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

தீக்கிரை
காஷ்மீரில் இருந்து பல பண்டிட்டுகள், விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பல்வேறு மாநிலங்களில் குடி பெயர்ந்துள்ளனர். அப்படி குடி பெயர்ந்து காலியாக இருந்த இரு வீடுகள்தான் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

8 வருடங்களுக்கு பிறகு
2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் காஷ்மீரில் இதேபோன்ற கலவரம் வெடித்தபோது கூட பண்டிட்டுகள் வீடுகளில் தாக்குதல் அரங்கேறவில்லை. 2008க்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன்பிறகு இப்போதுதான் பண்டிட்டுகள் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.

கலவரத்தை அடக்க உத்தரவு
இதேபோன்ற தாக்குதல் தொடர் கதையாகிவிட கூடாது என்பதை உறுதி செய்யுமாறு பாதுகாப்பு படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநில பிரச்சினையை முஸ்லிம் சமுதாயத்திற்கே எதிரானதாக மாற்றி காண்பிக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

சோஷியல் மீடியா சதி
இந்தியாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஐ.நா.வை பஞ்சாயத்துக்கு அழைக்கிறார்கள், பாகிஸ்தான் நாட்டு சோஷியல் மீடியா 'புரட்சியாளர்கள்'. இதுபோன்ற மூளை சலவை கருத்துக்கள், தீவிரவாதிகளுக்கு இந்தியா மீது குரோதத்தை மேலும் வளர்க்கும், இந்தியாவின் அமைதியை கெடுக்க அது உதவும் என்பது பாகிஸ்தான் நாட்டு சமூக வலைத்தள ஆர்வலர்கள் எண்ணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications