மும்பை பங்களாவில் ஊஞ்சல் அறுந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பலி
மும்பை: மும்பையில் எதிர்பாரா விதமாக ஊஞ்சல் அறுந்து அதன் மேலே பொருத்தப்பட்டிருந்த பளிங்கு சட்டம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.
மும்பை காந்திவிலியில் ராஜ் ரெசிடென்சி காம்ளக்ஸ்சில் உள்ள பங்களா ஒன்றில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தகிசர் பகுதியை சேர்ந்த நிசிகேத் ஆதித்யா(9), கரண்(6) ஆகிய 2 சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
உள்ளே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்திருந்த சிறுவர்கள் அனைவரும் அருகில் விளையாடிக் கொண்டிருக்க நிசிகேத், கரண் மற்றும் மற்றொரு சிறுவனும் அந்த பங்களா வீட்டில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென அந்த ஊஞ்சல் அறுந்து கீழே விழுந்தது. இதில், மேலே பொருத்தப்பட்டிருந்த பளிங்கினால் ஆன சட்டமும் இடிந்து சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டுப் பெரியவர்கள் ஓடி வந்து கட்டிட இடிபாடுகளில் இருந்து அவர்களை மீட்டுள்ளனர்.
உடனடியாக தலையில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களையும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்ரி நிசிகேத் மற்றும் கரண் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொரு சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காந்திவிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.