இரட்டை இலை யாருக்கு...வழக்கு விசாரணை அக்.23-க்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
Recommended Video

டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தின் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கு விசாரணை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ்- ஓபிஎஸ், தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.
அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன. டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் கெடு விதித்தது.

யார் வாதாடுகின்றனர்
இதற்காக எடப்பாடி, ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், சி.எஸ் வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆஜராகினர். டி.டி.வி.தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் முன்னாள் அமைச்சர் அஸ்வினிகுமார் வாதாடினார். இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்தது. எனினும் அந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

பொதுக்குழு தீர்மானம் ஒப்படைப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான தீர்மான நகலும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தினகரன் அவகாசம் கோரினார்
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கடந்த 6-ஆம் தேதியே வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரினர். அதே நேரத்தில் தினகரன் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் அணிகளின் தரப்பு வாதங்களைக் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணையை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினகரன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை
கடந்த 13-ஆம் தேதி தினகரன் தரப்பு வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா பணி நிமித்தம் காரணமாக ஆஜராகவில்லை. அதனால் அந்த வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் விசாரணை
மேலும் ஓபிஎஸ் தரப்பில் போலி கையெழுத்துடன் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார். இன்றைய விசாரணையில் அமைச்சர்கள் சண்முகம், உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு தரப்பினர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கானது வரும் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications