ஐஎன்எஸ் சிந்து ரத்னா கப்பல் விபத்தில் மாயமான 2 அதிகாரிகளும் மரணம்
மும்பை: இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துரத்னா, புதன்கிழமையன்று கடலுக்கடியில் இருந்தபோது திடீரென ஒரு பகுதியில் புகை கிளம்பியது. அப்போது கப்பலில் 94 பேர் இருந்தனர்.
இதையடுத்து உடனடியாக மீட்புப் படையினர் விரைந்தனர். கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் 7 பேர் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் லெப்டினன்ட் கமாண்டர் அபிஷ் முவால், லெப்டினன்ட் மனோரஞ்சன் குமார் பலி ஆகிய இரண்டு அதிகாரிகளை மட்டும் காணவில்லை. அவர்கள் கப்பலுக்குள் சிக்கியிருக்கலாம் குறிப்பாக புகை மூண்ட பகுதிக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
அவர்களைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இருவரும் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களது உடல்களை மீட்புப் படையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

சிந்துரத்னா கப்பலை மீட்டு கொண்டு வந்த பின்னர் இரு அதிகாரிகளும் இருந்த பெட்டியை உடைத்துத் திறந்து பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அத்தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications