எல்லையில் பாக்.,ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்...2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் பலியாகி உள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ நிலைகள் மீது குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்து வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். குரேஸ் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் எந்திர துப்பாக்கிகள், மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை இந்த தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இந்திய படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வருகிற 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.