ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அனந்த்நக் மாவட்டத்தின் கோகர்நக் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
பலியான தீவிரவாதிகளிடமிருந்து வெடிப்பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக, குல்காம் மாவட்டத்தில் என்கவுண்டர் நடந்தது. கோபால்போராவில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் வழியாக ஊடுரும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், வருகிற 30 ம் தேதி, நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications