பெங்களூர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களுக்கு தடை.. காவல்துறை அதிரடி
பாதுகாப்பு காரணங்களை கருதி, மீண்டும், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களில் பயணிக்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர்: தகவல் தொழில்நுட்ப தலைநகர் பெங்களூரிலுள்ள முக்கியமான மேம்பாலமான எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களுக்கு காவல்துறை தடை விதித்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
பெங்களூர் பொம்மனஹள்ளி முதல் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வரையிலான சுமார் 10 கி.மீ தூரத்திற்கு நீண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு டோல் வசூலிக்கப்படுகிறது.
இந்த மேம்பாலம் அளவில் குறுகியது. ஆனால், 10 கி.மீ தூரத்திற்கு எந்த வேகத்தடையும், சிக்னலும் கிடையாது என்பதால் கார்கள் அதிவேகத்தில் பயணிக்கின்றன.

சட்ட விரோத கார் ரேஸ்கள்
நள்ளிரவில் இங்கு சட்ட விரோத கார் ரேஸ்கள் நடக்கின்றன. சமீபத்தில் ரேசில் ஈடுப்டட ஒரு பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக காரை மகனுக்கு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டிருந்தார்.

பைக் கீழே வீசப்பட்டது
எனவே, இந்த மேம்பாலம் டூவீலர்களுக்கு அபாயகரமாக மாறிவிட்டது. அதிவேகமாக வரும் கார்கள், பைக்குகளை முட்டி மோதி தூக்கி எறிந்துவிடுகின்றன. பைக்கில் செல்வோர் மேம்பாலத்தின்கீழே தூக்கி வீசி கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது.

காரணம் இதுதான்
பெரும்பாலான விபத்துகள், பின்னால் இருந்து வந்த கார்கள் மோதியதால்தான் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம், வளைவான பகுதிகள் மேம்பாலத்தில் இருப்பதும், பைக்குகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேகமாக போக முடியாததும்தான். காற்று அதிவேகத்தில் அடிப்பதால் பாலத்தில் பயணிக்கும் டூவீலர் ஓட்டிகளால் 60 கி.மீக்கு மேல் வேகத்தில் செல்ல முடிவதில்லை. ஆனால், கார்களோ மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்கின்றன.

வாபஸ் பெற்ற காவல்துறை
இதையடுத்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்கள் செல்ல கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, போக்குவரத்து காவல்துறை திடீரென தடை விதித்தது. இதனால் டூவீலர் ஓட்டிகள் பாலத்திற்கு கீழே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு டிராபிக் நெரிசல் அதிகரித்தது. இதையடுத்து புதன்கிழமை மாலையில், தனது உத்தரவை காவல்துறை திரும்ப பெற்றுள்ளது.

மீண்டும் அமல்?
இருப்பினும் பாதுகாப்பு காரணங்களை கருதி, மீண்டும், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களில் பயணிக்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications