ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை- மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்- என்.ஐ.ஏ. விசாரணை!
ஜெய்ப்பூர்: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா அவதூறாக பேசியதை ஆதரித்த டெய்லர் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா, டிவி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசினார். இது நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உ.பி.கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது.

நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சு சர்வதேச விவகாரமாகவும் உருவெடுத்தது. பல்வேறு நாடுகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. இதன் பின்னர் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனாலும் நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி பல இடங்களில் பிரம்மாண்ட போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட டெய்லர் கன்னையாலால் டெலி (வயது 40) என்பவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் கண்ணையாலால் டெலியை தாங்களே படுகொலை செய்ததாக இரு இஸ்லாமிய இளைஞர்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர். அதில் இறைத்தூதரை விமர்சிப்பவர்களுக்கு ஒரே ஒரு தண்டனை தான். அவர்கள் உடலிலிருந்து தலையை தனியாக்கி விடுவோம் என கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர். மேலும் பிரதமர் மோடி நீங்கள் பற்ற வைத்த பெருநெருப்பை நாங்கள் அணைத்துள்ளோம் எனவும் அதில் அந்த இளைஞர்கள் பேசியுள்ளனர்.
இதையடுத்து அந்த இரு கொலைகார இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அசம்பாவிதங்கள், வன்முறைகள் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது பயங்கரவாத செயல் என்பதால் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்த ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications