வியாபம் ஊழலுக்காக ம.பி. முதல்வர் ஏன் பதவி விலக வேண்டும்?: மத்திய அமைச்சர் உமா பாரதி
டெல்லி: வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலகத் தேவையில்லை என்று மத்திய அமைச்சரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஊழலுக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி
விலக வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் உமா பாரதி கூறுகையில்,
வியாபம் ஊழல் விவகாரத்தில் நான் சிவராஜ்ஜி பக்கம் தான். அவர் என்னை விட சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவர் என்னை விட பொறுமையானவர். சிவராஜ்ஜி ஊழலில் ஈடுபடவில்லை. அப்படி இருக்கையில் அவர் எதற்கு பதவி விலக வேண்டும்? மீண்டும் மத்திய பிரதேச முதல்வர் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகிய திருமூர்த்திகள் தான் கட்சி மற்றும் அரசை நடத்துவதாக பாஜக தலைவர் அருண் ஷோரி தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் உமா பாரதியிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,
அந்த திருமூர்த்திகள் அரசு மற்றும் கட்சியை நடத்தாவிட்டால், யார் நடத்துவது?. அவர்களை நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பேன். கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கத்தை கொண்டு வந்துள்ளார் மோடி என்றார்.