ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக முயலும் இந்தியாவுக்கு நல்ல சேதி
டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடு அங்கீகாரம் பெற விழையும் இந்தியாவின் முயற்சிக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது. சீனா, பாகிஸ்தான், ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி, பாதுகாப்பு கவுன்சிலரை மறுசீரமைப்பது குறித்து ஆலோசிக்க ஐ.நா. ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை இந்தியா வரவேற்றுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைத்து, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று, இந்தியா தரப்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி செய்தால், நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆனால், நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் உள்ள அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், இந்தியாவின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன. மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு கூட, இந்த நாடுகள் சம்மதிக்கவில்லை.
ஆனால், இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு, தற்போது, குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு நடத்துவதற்கு, ஐ.நா., தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை (டிராப்ட்), ஐ.நா. பொதுச்சபை நேற்று ஏற்றுக்கொண்டது.
ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி ஐ.நா. பொது கவுன்சிலில் இதுகுறித்து பேசுகையில், "ஐ.நா. நடவடிக்கை ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது" என்று பாராட்டினார்.
சீனாவோ, இது சரியில்லை என்றும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா.வுக்கான முன்னாள் இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், "இந்தியாவின் சிறப்பான ராஜதந்திர காய் நகர்த்தலுக்கு கிடைத்த வெற்றி இது" என்று தெரிவித்தார்.