டெல்லி பாஜக அலுவலகத்தில் மர்மப் பைகள் – வெடிகுண்டு பீதியால் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியில் கிடந்த மர்மப்பைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அசோகா சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று அங்கு கேட்பாரற்ற நிலையில் 3 பைகள் அனாதையாக வெளியில் கிடந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாஜகவினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அப்பைகளைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.
கடைசியில் அப்பைகளில் இருப்பது வெறும் துணிகள்தான் என்பது தெரியவந்தது. அதன் பின்னர்தான் அனைவரும் கலைந்து சென்றனர். அந்தப் பைகளில் குண்டுகள் இருக்கலாம் என்று பீதி கிளம்பியதால் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் வெறும் துணிகள் இருந்ததால் பதட்டம் தணிந்தது.
இந்நிலையில் பாஜக அலுவலகத்திற்கு வந்த ஒரு தம்பதியினர் அது தங்களுடைய பைகள்தான் என்று தெரிவித்தனர்.
"அந்த தம்பதியினர் தங்களுடைய பைகளை பாஜக அலுவலகத்தின் வாசலில் வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த ஆந்திரா பவனில் சாப்பிட சென்றுள்ளனர். அதற்குள் யாரோ ஒருவர் இந்த பைகள் பற்றிய வதந்தியை கிளப்பி விட்டுள்ளார்" என்று டெல்லி கூடுதல் கமிஷனர் எஸ்பிஎஸ் தியாகி கூறியுள்ளார்.
விசாரணைக்காக அந்தத் தம்பதியனர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் எந்த பாதிப்பும் இல்லாவிட்டாலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.