பல லட்சம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்தாரா ஜெயந்தி நடராஜன்?
டெல்லி: பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமலேயே ஜெயந்தி நடராஜனின் வசம் இருந்த சுற்றுச்சூழல் அமைச்சகம் செயலற்று முடங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜெயந்தி நடராஜன் திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக் கொண்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பினார். ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டு அவர் வசம் இருந்த துறைகளை கூடுதல் பொறுப்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வசம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் கட்சிப் பணிகளுக்காகவே ஜெயந்தி நடராஜன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அவரைத் தொடர்ந்து மேலும் பல மத்திய அமைச்சர்கள் விடுவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை
இருப்பினும் அண்மையில் கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், மத அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சுற்றுச் சூழல் அமைச்சகம் முடிவு செய்தது. இப்படி கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரையை சுற்றுச் சூழல் அமைச்சகம் நடைமுறைப்படுத்தினால் சுரங்கம், தொழில்துறை, ரியல்ஸ் எஸ்டேட் வர்த்தகம் மற்றும் மின் திட்டங்கள் கடுமையாக பாதிக்கும், இது கேரளாவுக்கு மிகப் பெரும் பொருளாதார இழப்பாகும் என்பதாலே அம்மாநிலமே கொந்தளித்தது. இப்படி பாதிக்கப்பட்ட லாபிகள் ஒன்றுசேர்ந்துதான் ஜெயந்தி நடராஜனை நீக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.

ரூ4 லட்சம் கோடி மதிப்பிலான மின் திட்டங்கள்
அத்துடன் ரூ4 லட்சம் கோடி மதிப்பிலான 70 மின் திட்டங்களுக்கு, சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதலே அளிக்காமல் முடக்கி வைத்திருந்ததாக மின் துறை அமைச்சகம் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தது. இதுவும் அரசு மற்றும் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் மீது அதிருப்தி உருவாகக் காரணமாம்.

ரூ20 ஆயிரம் கோடி
இதேபோல் ரூ20 ஆயிரம் கோடி மதிப்பிலான 200 திட்டங்களை முதலீட்டுக்கான கேபினட் கமிட்டி சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதையும் கூட ஓகே செய்யாமல் கிடப்பில் போட்டதாம் சுற்று சூழல் அமைச்சகம்.

முடங்கிக் கிடந்ததோ?
தேர்தல் நெருங்கும் நிலையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதலே தராமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் முடங்கிக் கிடந்ததாலே ஜெயந்தி நடராஜனின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்ததாம்.

பிரதமர் அலுவலகத்துடனும் மோதலா?
புவிவெப்பமாயதல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டிருந்ததாம். ஆனால் அதையும் கூட சுற்றுச் சூழல் அமைச்சரான ஜெயந்திர நடராஜன் ஏற்காமல் பிடிவாதம் காட்டினாராம்.

சரத் பவாருடன் மோதல்..
இதேபோல் வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், புதிய மரபணு பயிர்களை உருவாக்குவதற்கான தடையை நீக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாராம். அதையும் ஜெயந்தி நடராஜன் ஏற்கவில்லையாம். இப்படி சுற்றி சுற்றி எதிர்ப்புகளை சம்பாதித்த காரணத்தினாலும் சில திட்டங்களில் பேரம் பேசியதாலுமே ஜெயந்தி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications