மணிப்பூரில் ஓயாத இன வன்முறை- 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- அமித்ஷா இன்று நேரில் ஆய்வு!
இம்பால்: மணிப்பூரில் இன வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. மணிப்பூரில் வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் நிலைமைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு செய்கிறார்.
மணிப்பூரில் குக்கி, நாகா இன மக்கள் பழங்குடியினராக உள்ளனர். மைத்தேயி இன மக்கள், தங்களை பழங்குடி இனப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். இதற்கு ஆதரவாக மணிப்பூர் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. ஆனால் குக்கி, நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை வெடித்தது.

கடந்த ஒரு மாத காலமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருகின்றன. இதனால் இம்மாநிலத்தில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்னொரு பக்கம், மைத்தேயி மக்கள் இல்லாத தனி நிர்வாக அமைப்பு அல்லது தனி மாநிலத்தை தங்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்கின்றனர் குக்கி இன மக்கள்.
இதனிடையே மணிப்பூர் வன்முறைகளில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக முதல்வர் பைரேன்சிங் கூறியுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications