‛‛ஜேகேஎன்ஃஎப்’’ அமைப்புக்கு 5 ஆண்டு தடை.. இரவில் மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு! யார் இவர்கள்?
ஜம்மு காஷ்மீர்: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோத செயல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்து வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பை இன்று மத்திய அரசு தடை செய்துள்ளது.

ஜேகேஎன்ஃஎப் எனும் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி (Jammu Kashmir National Front) எனும் அமைப்பு வரும் 5 ஆண்டுகள் வரை செயல்பட மத்திய அரசு அதிரடியாக இன்று தடை விதித்துள்ளது.
இந்த ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி எனும் அமைப்பு நயாம் அகமது கான் என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பல புகார்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்றன. இந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பை இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜேகேஎன்எப் எனும் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுதல், அங்கு பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சதித்திட்டம், பாதுகாப்பு அமைப்பினர் மீது கல்வீசுதல் உள்ளிட்டவற்றில் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதனால் 5 ஆண்டுகள் வரை ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்புக்கு தடை விதிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications