எல்லா ஆண்களுக்கும் 2 மனைவிகள் கட்டாயம்! வினோத பழக்கத்தை கடைப்பிடிக்கும் இந்திய கிராமம்! என்ன காரணம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஆண் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்வாராம். பல காலமாகவே இந்த பழக்கம் அங்குப் பின்பற்றப்பட்டு வருகிறது. எதற்காக இதுபோல ஒரே ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்குப் பின்னணியில் உள்ள வினோதமான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா என்பதை பல்வேறு தரப்பு மக்களும் வாழும் ஒரு நாடாகும். இங்குப் பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல்வேறு உணவு முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் கிராமம்:
நமது நாட்டில் ஒரு பகுதியில் இயல்பாகப் பின்பற்றப்படும் பழக்கம் என்பது நாட்டின் மற்றொரு பகுதியில் மிகவும் வினோதமான ஒன்றாகப் பார்க்கப்படும். அப்படியொரு வினோதமான பழக்கம் தான் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ஒரு கிராமத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கம் பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.
வினோத பழக்கம்:
600 குடும்பங்கள் வசிக்கும் இந்த ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இரு திருமணங்களைச் செய்து கொள்வார்களாம். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தாலும், அங்குள்ளவர்கள் பல காலமாகவே இதைச் செய்து வருகிறார்களாம். இதற்கு என்ன காரணம் எனக் கேட்டால் வினோதமான ஒரு விஷயத்தையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தலைமுறை தலைமுறையாக இந்த பழக்கம் வேரூன்றி இருப்பதாகவும் அந்த கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆண்கள் பலரும் பல மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். நமது நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி பலதர மணம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும், காலம் காலமாகப் பின்பற்றும் நம்பிக்கை காரணமாக அங்குள்ள ஆண்கள் இதுபோல பலரையும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
என்ன காரணம்:
அதாவது முதல் மனைவியால் எப்போதும் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கை. முதல் மனைவியால் மகனைப் பெற்றெடுக்க முடியாது என்று கருதியே இங்குள்ள ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்கிறார்கள். இதற்கு எந்தவொரு அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை என்ற போதிலும் அங்கு ஆண்கள் இரு திருமணங்கள் செய்கிறார்கள்.
இரண்டாவது திருமணத்தில் சிலருக்கு ஆண் குழந்தை பிறந்தாலும் பெண் குழந்தைகளும் பலருக்குப் பிறக்கிறது. இதனால் அங்குப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாம். இப்போது அங்கு ஆண்கள் குறைவாகவும் பெண்கள் மிக அதிகமாகவும் உள்ளனர். இதுவும் கூட ஆண்கள் இரு திருமணங்களைச் செய்யக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
கிளம்பும் எதிர்ப்பு:
இது பல காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை என்றாலும் இப்போது கிராமத்திலேயே இளைய தலைமுறையினர் பலரும் இது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். இது பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்துவத்தைப் பறிப்பதாக எதிர்க்கிறார்கள். அதேநேரம் அந்த கிராம மக்கள் இது காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை என்றும் இதை நிறுத்த கூடாது என்றும் சொல்லி வருகிறார்கள்.
இருப்பினும், முதல் மனைவியால் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லாத சூழலில் இதை ஏற்க முடியாது என்று பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுவே அங்கு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications