திருப்பதி மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து கர்ப்பிணியிடம் 10 பவுன் அபேஸ்
திருப்பதி மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து கர்ப்பிணியிடம் 10 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டார்.
திருப்பதி: திருப்பதியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து கர்ப்பிணியிடம் 10 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியை அடுத்த குடிமல்லம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி.
இவருக்கு திடீரென பிரசவ வலி வந்ததால் அவர் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி ஒரு ஆண் மருத்துவர் அறைக்கு வந்தார்.
அப்போது பரிசோதனையின்போது நகைகள் அணிந்திருக்கக் கூடாது என்று கூறி அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டார். பின்னர் இதை மருத்துவமனை லாக்கரில் வைத்து விட்டு வந்து பரிசோதனை செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த நபர் வராததை அடுத்து சந்தேகமடைந்த கர்ப்பிணியின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். அப்போது வந்தவர் போலி மருத்துவர் என தெரிந்தது.
இதுகுறித்து திருப்பதி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.