பாஜக பேசும் வளர்ச்சி யாருக்கானது? ஏழைகளைப் பற்றி ஏன் பேசுவதில்லை?: ராகுல்

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பல இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிகானிரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசுகின்றனர். நீங்கள் பேசும் வளர்ச்சி யாருக்கானது? நீங்கள் பேசுகிற போது சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே பாதைகளைப் பற்றியே பேசுகிறீர்கள்.
ஏன் ஏழைகளைப் பற்றி, ஏழை மக்களைப் பற்றி பேசுவதே கிடையாது? இந்த நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்கின்றனர். காங்கிரஸ் கட்சியும் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையே விரும்புகிறது. ஆனால் பாஜகவோ விமான நிலையங்களை கட்டினாலே இந்தியா முன்னேறிவிடும் என்று நம்புகிறது.
உண்மைதான் விமான நிலையங்கள் கட்டத்தான் வேண்டும்.. ஆனால் அதற்காக இந்த நாட்டின் ஏழைகளைப் புறக்கணித்துவிட முடியாது.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் மோதிக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் அனைத்து இன மக்களும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல நலத் திட்டங்களால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டு வந்தோம். இப்போது அரசை யார் வேண்டுமானாலும் எதிர்த்துக் கேள்வி கேட்கலாம். நாட்டில் கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது கிண்டலடித்தனர். அதனால் என்ன பயன் என்று கேலி பேசினர். இன்று நிலைமை என்ன? கம்ப்யூட்டரின் முக்கியத்துவத்தை அனைவருமே உணர்ந்திருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications