யோகிதான் உ.பியின் நீதிபதி.. அவரே "புல்டோசர்" தண்டனையும் கொடுத்துவிடுகிறார்.. சரமாரியாக விளாசிய ஓவைசி
கட்ச்: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவதாரம் எடுத்துள்ளதால், அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக தீர்ப்பு எழுதி, அவர்களின் வீடுகளை இடிப்பார் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.
Recommended Video
6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம்
பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா இஸ்லாமிய இறைதூதர் நபிகள் குறித்து பேசிய கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. முக்கியமாக கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. இதனைத்தொடர்ந்து நுபுர் ஷர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வெடித்த இஸ்லாமியர்கள் போராட்டம்
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறந்த தொழுகை முடித்து மசூதிகளில் இருந்து வெளிவந்த இஸ்லாமியர்கள் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசம், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கால் போராட்டம் நடைபெற்றது. அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அம்பேத்கர் நகர், பிரயக்ராஜ் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 2 நாட்களாக 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவிட்டு கைது செய்தனர்.
மீண்டும் புல்டோசர் அரசியல்
இதனிடையே இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு மூளையாக செயல்பட்டதாக சமூக செயற்பாட்டாளரான அஃப்ரீன் ஃபாத்தீமா என்பவரின் தந்தை முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சிஐஏ போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கண்டனங்கள் அஃப்ரீன் ஃபாத்தீமா தெரிவித்திருந்தார். அவரது தந்தை முகமது வீட்டில் சோதனை செய்த போலீசார், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததை கண்டுபிடித்ததாகவும், நீதிமன்றத்திற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதல்வன் பட பாணியில் வீடு இடிப்பு
இதனிடையே முகமது என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, இன்னொரு பக்கம் அவரது வீட்டை 12 மணிக்குள் காலி செய்யக் கோரி மாவட்ட நகராட்சி நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. காரணமாக, வீட்டின் மேல்தளம் மற்றும் தரைதளம் விதிகளை மீறி கட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை குடும்பத்தினர் எதிர்த்து வீட்டில் இருந்து வெளியேற முடியாது என்று வீட்டிற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதையும் கண்டுகொள்ளாமல், பாஜக அரசு புல்டோசர்களை வைத்து வீட்டின் ஒரு பக்கத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். ஆனால் முகமது தரப்பில், இதுவரை வீட்டை இடிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நோட்டீஸையும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்தக் காட்சிகள், அர்ஜூன் நடித்த முதல்வன் காட்சிகளை நினைவூட்டும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
யோகியை விளாசிய ஓவைசி
இதுகுறித்து குஜராத் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அசாதுதீன் ஓவைசி, அலகாபாத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவதாரம் எடுத்துள்ளார். அதனால் அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக தீர்ப்பு எழுதிவிட்டு, வீடுகளை இடிப்பார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.