முதியவரின் டைப்ரைட்டரை தூக்கிப் போட்டு உடைத்து காட்டுத்தனமாக நடந்து கொண்ட எஸ்.ஐ.
லக்னோ: உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள தலைமைத் தபால் நிலையம் முன்பு டைப் ரைட்டரை வைத்துக் கொண்டு மனு அடித்துத் தருவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்த முதியவரிடம் காட்டுத்தனமாக நடந்து கொண்ட சப் இன்ஸ்பெக்டரால் மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த மாநில அரசு அந்த சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவரால் உடைக்கப்பட்ட டைப் ரைட்டருக்குப் பதில் புதிய டைப் ரைட்டரை அந்த முதியவருக்கு அளித்துள்ளது.
கிருஷ்ண குமார் என்ற அந்த 65 வயது முதியவர், தலைமைத் தபால் நிலையத்திற்கு எதிரே கடந்த 35 வருடமாக டைப் ரைட்டருடன் தொழில் செய்து வருகிறார். மனு அடித்துத் தருவது உள்ளிட்டவற்றை அவர் செய்து வருகிறார். இதுதான் அவரது அன்றாட வாழ்க்கைக்கு ஒரே பொருளாதார ஆதாரம். தினசரி 50 ரூபாய் சம்பாதித்தாலே பெரிது. தினசரி 10 மணி நேரம் இவர் வேலை பார்ப்பார்.
இந்த நிலையில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் அந்த முதியவரிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டசெயல் அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது.

ஆக்கிரமிப்பு என புகார்
சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர், இங்கு ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று கூறி கிருஷ்ணகுமாரை அங்கிருந்து போகக் கூறியுள்ளார். ஆனால் தனக்கு இதுதான் பிழைப்பு என்றும், இதை விட்டால் வேறு நாதியில்லை என்றும் அந்த முதியவர் சப் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சியுள்ளார்.

தூக்கிப் போட்டு உடைத்த கொடூரன்
ஆனால் அதை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த சப் இன்ஸ்பெக்டர் இடத்தைக் காலி செய் என்று சத்தம் போட்டுள்ளார். முதியவரோ தொடர்ந்து கெஞ்சவே ஆத்திரமடைந்த அந்த போலீஸ்காரர், முதியவரிடமிருந்த டைப் ரைட்டரைத் தூக்கி கீழே போட்டு உடைத்தார். காலால் அதை தூக்கி வீசினார்.

தயவு காட்டுங்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த முதியவர், உடைந்து போனது டைப் ரைட்டர் பாகங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அந்த சப் இன்ஸ்பெக்டரிடம், வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளேன். தயவு காட்டுங்கள் என்று மீண்டும் கெஞ்சியுள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த சப் இன்ஸ்பெக்டர் உடைந்து போன டைப் ரைட்டரைப் பிடுங்கி மீண்டும் கீழே போட்டு சுக்கு நூறாக உடைத்து மிருகத்தனமாக நடந்து கொண்டார்.

கண்ணீர்க் கடலில்
என்ன செய்வது என்று தெரியாமல் தனது வாழ்வாதாரம் தனது கண் முன்பாகவே சுக்கு நூறாக உடைந்து போனதைப் பார்த்து வாய் விட்டு அழுதார் அந்தப் பெரியவர். இந்த அராஜகச் செயலை சிலர் புகைப்படம் எடுத்து பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் போட்டனர்.

அதிர்ச்சி அடைந்த முதல்வர்
இதைப் பார்த்த முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட அவர் புதிய டைப் ரைட்டர் ஒன்றை வாங்கி அதை அவரது வீட்டுக்கே நேரில் சென்று வழங்கவும் உத்தரவிட்டார்.
|
நேரில் சென்று மன்னிப்பு கேட்டு வழங்கிய கலெக்டர், எஸ்.பி.
இதையடுத்து புதிய டைப் ரைட்டரை வாங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக முதியவரின் வீட்டுக்குச் சென்றார். அவருடன் மாவட்ட எஸ்.பியும் சென்றார். இருவரும் அந்தப் பெரியவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு புதிய டைப் ரைட்டரையும் வழங்கினர்.












Click it and Unblock the Notifications