உத்தரபிரதேச காவல்நிலையத்தில் பெண் பலாத்காரம்: எஸ்.ஐ கைது
லக்னௌ: உத்தரப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவரை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9-ம் தேதி இரவு ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல்நிலையத்தில் இருந்த தனது கணவரைப் பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணிடம், பாண்டே என்ற காவல்துறை ஆய்வாளர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் காவல்நிலைய வளாகத்தில் உள்ள ஊழியர் குடியிருப்புக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற 3 காவலர்கள், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுமேர்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, எஸ்.ஐ. பாண்டே கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 காவலர்கள் தப்பிச் சென்றதால், அவர்களைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உ.பி மாநிலத்தில், பதான் கிராமத்தில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே அங்கு மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.