பிரித்து மேய்ந்த ஊடகங்கள்… மாதுரி தீக்ஷித் படத்தை தவிர்த்த அகிலேஷ்
லக்னொ: ஊடகங்களின் கடும் விமர்சனம் காரணமாக மாதுரி தீக்ஷித்தின் ‘தேத் இஷ்கியா' படம் பார்ப்பதை ரத்து செய்தார் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடும் குளிரை தாங்க முடியாமல் பல குழந்தைகள் இறந்துவிட்டன. இந்த சோகமான சூழ்நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவ், தனது சொந்த ஊரான சாய்பாய் கிராமத்தில் பாலிவுட் நடிகர்களின் கலை நிகழ்ச்சியை உற்சாகமாக கண்டுகளித்தார்.
அத்துடன், திரைக்கே வராத மாதுரி தீட்சித் படமான தேத் இஷ்கியாவிற்கும், சைப் அலி கானின் புல்லட் ராஜா படத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். மக்கள் குளிரால் நடுங்கி உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் அகிலேஷ் யாதவ் அது பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் இவ்வாறு கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கடுமையாக குற்றம்சாட்டின.
இதனிடையே இன்று பிற்பகல் தேத் இஷ்கியா சிறப்பு காட்சியையும் அவர் பார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஊடகங்களில் விமர்சனம் காரணமாக , தேஷ் இஷ்கியா அரங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் தனது திட்டத்தை அகிலேஷ் யாதவ் திடீரென ரத்து செய்துள்ளார். இதற்கான காரணத்தை முதல்வர் அலுவலகம் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், பொது விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications