மருத்துவ காப்பீடு குறித்து விழிப்புணர்வு இயக்கம்! களமிறக்கப்பட்ட அதிகாரிகள்.. உ.பி அரசு புது முயற்சி
லக்னோ: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயனாளர்களை இணைப்பதற்கு சிறப்பு இயக்கத்தை உத்தரப் பிரதேச அரசு முன்னெடுத்திருக்கிறது. எதிர்பார்த்ததை விட குறைவான அளவில்தான் பயனர்கள் சேர்ந்திருப்பதால் இந்த இயக்கம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயனாளர்களை இணைப்பதற்கு சிறப்பு இயக்கத்தை அறிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காப்பீட்டின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். நாடு முழுவதும் சுமார் 50 கோடி பேரை இந்த திட்டத்தில் இணைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் 3.48 கோடி பேர் இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுவரை 1 கோடி பேர் மட்டுமே இதில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
எனவே மீதமுள்ள மக்களை இணைக்கவும், இது குறித்த மக்களுக்கு விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார். இந்த பிரசார இயக்கம் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நடைபெறும். கிராமப்புறங்களை மையப்படுத்தி இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும், இதில் பணியாற்றும் ஊழியர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது இந்த திட்டம் மாநிலத்தின் சுகாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications