உ.பியில் பயங்கரம்.. ஸ்கூல் லீவுக்காக 1-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ம் வகுப்பு மாணவி
பள்ளி விடுமுறைக்காக 1-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ம் வகுப்பு மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ: பள்ளியில் விடுமுறை விடுவார்கள் என்பதற்காக 1-ம் வகுப்பு மாணவனை 6-ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது.
லக்னோ பிரைட்லேண்ட் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
கத்தி குத்து சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்தது என்பது பெற்றோரின் குற்றச்சாட்டு. கத்தி குத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களை வைத்து மாணவி ஒருவர்தான் இச்செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காயமடைந்த மாணவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் சிக்கினார். அவர் ஏற்கனவே தேர்வில் காப்பி அடித்து பிடிபட்ட போது தமது மணிக்கட்டை கீறிக் கொண்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
பள்ளியில் லீவு விடுவார்கள் என்பதற்காக மாணவனை கத்தியால் குத்தியதாகவும் அம்மாணவி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அம்மாணவி தற்போது சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் கத்தி குத்து சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரிக்க பள்ளி நிர்வாகிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.