உ.பி. சட்டசபை தேர்தலில் மாயாவதியின் கை ஓங்கும்: கருத்துக்கணிப்பு
லக்னோ: அடுத்த ஆண்டு நடக்கும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று அங்கு தொங்கு சட்டசபை அமையும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக, ஆளும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஏற்கனவே பிரச்சாரத்தை துவங்கிவிட்டன.

ஆளும் சமாஜ்வாடி கட்சியில் குடும்ப பிரச்சனை புகுந்து பாடாய் படுத்துகிறது. இந்நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
சமாஜ்வாடி கட்சியின் பிரச்சார யாத்திரையை அக்கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் அண்மையில் துவங்கி வைத்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மாநிலம் முழுவதும் தீயாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மாத இதழ் ஒன்று தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிய வந்துள்ளது.
பாஜகவுக்கு மாற்று தான் தான் என்று கூறி வரும் மாயாவதி முஸ்லீம்களின் வாக்குகளை பெற தீவிர முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications