மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நூடுல்ஸ்: காரீயத்தை அடுத்து தற்போது நூடுல்ஸில் சாம்பல் !
பாரபங்கி: மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக காரீயம், சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி ஓய்ந்த நிலையில், தற்போது சில நூடுல்ஸ் பிராண்டுகளில் தரம் குறைவாக இருப்பதாகவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட சாம்பல் சத்தின் அளவு அதிகமாக இருப்பதை உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்புத்துறை கண்டறிந்துள்ளது.
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈயம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது நார் சூப்பி நூடுல்ஸ், ஹார்லிக்ஸ் ஃபூடுல்ஸ் நூடுல்ஸ், மற்றும் சிங் ஹாட் கார்லிக் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஆகியவற்றில் சாம்பல் சத்தின் அளவு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து பாரபங்கி மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் சிங் கூறும் போது, "நார் சூப்பி நூடுல்ஸ், ஹார்லிக்ஸ் ஃபூடுல்ஸ் நூடுல்ஸ், சிங்கின் ஹாட் கார்லிம் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை கடந்த ஆண்டு மே மாதம் நகர மால் ஒன்றிலிருந்து திரட்டினோம், அதனை சோதனை செய்ததன் அறிக்கை 15 நாட்களுக்கு முன் வெளியானது.
இந்த மாதிரிகள் லக்னோவில் உணவு ஆய்வு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டன. இதில் சேர்க்கப்பட்டுள்ள சுவையூட்டியில் சாம்பல் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது தரமற்ற நூடுல்ஸ் என தெரியவந்துள்ளது
இந்த நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட சாம்பல் சத்தின் அளவு 1% வரை இருக்கலாம், ஆனால் இந்த நூடுல்ஸ் மாதிரிகளில் சாம்பல் அளவு 1.83% இருந்தது. அதாவது சிங் நூடுல்ஸில் 1.83%, ஹார்லிக்ஸின் ஃபூடுல்ஸ் நூடுல்ஸில் 2.37%, சூப்பி நூடுல்ஸில் 1.89% சாம்பல் அளவு உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து 3 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய இந்நிறுவனங்களுக்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
கடந்த ஆண்டு மேகி நூடுல்ஸின் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் (அஜினமோட்டோ) அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து நெஸ்லே நிறுவனம் அனைத்து நூடுல்ஸையும் சந்தையிலிருந்து திரும்பப் பெற்று அழித்தது. பின்னர் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் மேகி பாதுகாப்பானது என்று தெரியவந்தது. அதன் பிறகு கடந்த நவம்பரில் மேகி நூடுல்ஸ் மீண்டும் சந்தைக்கு வந்தது.
இந்நிலையில் 3 நிறுவனங்களின் நூடுல்ஸில் சாம்பல் சத்து அளவுக்கு அதிகமாக உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது மீண்டும் நூடுல்ஸ்க்கு தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.