ஜூன் 19ம் தேதி மாணவர் விசா தினமாகக் கொண்டாட அமெரிக்கத் தூதரகம் திட்டம்
டெல்லி: இம்மாதம் 19ம் தேதியை மாணவர் விசா தினமாகக் கொண்டாட அமெரிக்கத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் மேற்படிப்பு என்பது பெரும்பாலான இந்திய மாணவர்களின் கனவு என்றே கூறலாம். ஆனால், பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகள் பிற நாட்டு மாணவர்கள் கல்வி பெற வருவதை அமெரிக்கா கட்டுப் படுத்தி வைத்திருந்தது.
தற்போது மீண்டும் அந்த எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வரும் 19ம் தேதியை மாணவர் விசா தினமாகக் கொண்டாட டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பண்டிகை சூழல்...
வரும் 19ம் தேதியன்று விசா விண்ணப்பித்தலுக்காக வரும் மாணவர்கள் பண்டிகை மற்றும் கல்லூரி சூழலுடன் அங்கு வரவேற்கப்படுவார்கள்.
பிரத்யேக அனுமதி...
அமெரிக்காவில் மேற்படிப்பிற்காக எப், ஜே மற்றும் எம் விசாக்களைப் பெறுவதற்காக வரும் மாணவர்களுக்கென அன்று தூதரகத்தின் கதவுகள் பிரத்தியேகமாகத் திறந்திருக்கும்.
குறிப்புகள்...
அமெரிக்க இந்திய கல்வி அறக்கட்டளையின் யுஎஸ்ஏ கல்வி மையத்தின் பிரதிநிதிகளும், தூதரக அலுவலர்களும் கல்லூரி படிப்புகள் மற்றும் விடுதி வாழ்க்கை போன்றவற்றின் குறிப்புகளை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவர்.
அதிகம்...
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த உயர்வானது அதற்கு முந்தைய ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications