இந்தியாவுக்கு அமெரிக்கா 21 மில்லியன் தரவே இல்லை.. டிரம்ப் கூறியது பொய்? வாஷிங்டன் போஸ்ட் பதிவு
சென்னை: இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க 21 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது என்ற டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டை வாஷிங்டன் போஸ்ட் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது போல், பாஜகவை குறிவைக்க காங்கிரசுக்கு பணம் வழங்கியதற்கான எந்த பதிவுகளும் இல்லை என்று என்று செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் சொன்ன அந்த $21 மில்லியன், 2022 இல் இந்தியாவிற்கு அல்ல, வங்கதேசத்திற்கு தான் தரப்பட்டது என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், அமெரிக்க அரசு நிர்வாகத்தின் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) பிப்ரவரி 16 அன்று பல திட்டங்களுக்கான நிதியுதவி "ரத்து" செய்யப்பட்டதாக அறிவித்தது. இதுபற்றி மியாமியில் புதன்கிழமை உரையாற்றி டிரம்ப், "2022ம் ஆண்டு முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில், இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் திட்டத்துக்கு 21 மில்லியன் டாலர் (182 கோடி ரூபாய்) வழங்கப்பட்டது என்று டிரம்ப் கூறினார்.

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கு அவ்வளவு பணத்தை நாம் ஏன் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பிய டிரம்ப், தங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்வதற்காக இந்திய பொதுத்தேர்தலில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தலையிட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன் என டிரம்ப் வெடியை கொழுத்திப்போட்டார். இது, இந்தியாவில் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது.காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவை விமர்சிக்க தொடங்கினார்கள்..
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "தேர்தல் நிதியுதவி தொடர்பாக அமெரிக்க அரசு நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட தகவல்களை நாங்கள் பார்த்தோம். இவை மிகவும் கவலையளிக்கிறது. இது இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பாக விசாரித்து வருகின்றன. இப்போதைக்கு இது தொடர்பாக பேசுவது பொருத்தமாக இருக்காது" என்று கூறினார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் தோற்கடிக்க அமெரிக்கா 21 மில்லியன் டாலர் கொடுத்தது என்றால், இந்திய உளவுத் துறையும், 'ரா' பிரிவும் எங்கே போயின என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பான பவன் கெரா கேள்வி எழுப்பினார். பணம் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் எனறும்,ஆனால் ஒரு பெரிய தொகை வங்கதேசத்துக்குச் சென்றது தொடர்பான புலனாய்வு பத்திரிகையின் ஓர் ஆவணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டியிருக்கிறோம் எனறும் கூறினார். அமெரிக்கா தலையிட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பாஜக காங்கிரஸ் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், எலான் மஸ்கின் DOGE அமைப்பின் கூற்று தவறு என்பது உண்மை சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தியின் படி, 2008 முதல் தேர்தல் தொடர்பான எந்தவொரு திட்டத்திற்கும் USAID யிடமிருந்து இந்தியா எந்த நிதியையும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வங்கதேசத்திற்கு தான் அமெரிக்கா நிதி வழங்கி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கருத்தை அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்ட் ஆதரித்துள்ளது.
அமெரிக்கா நிதி உதவி அளித்தது எந்தெந்த நாட்டிற்கு என்பது அறிந்தவர்களின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ள வாஷிங்டன் போஸ்ட், இந்தியாவில் DOGE( அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறை)யின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய எந்த திட்டமும் இல்லை என்று கூறியிருக்கிறது. அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறையின் அந்தக் கூற்றைக் கண்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். இந்தியாவில் தேர்தல்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, ஏனெனில் நாங்கள் ஒருபோதும் இதில் ஈடுபடவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே வாஷிங்டன் போஸ்ட் செய்தியை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, "இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா நிதியுதவி செய்வதாக அறிக்கை வெளியானது. ஆனால் அப்படி எந்த திட்டம் இதுவரை நடந்தது இல்லை என்பது அம்பலமாகி உள்ளது. அப்படி ஒரு நிதி எதுவும் இந்தியாவிற்கு வரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதனை கண்ணை மூடி ஆதரிப்பவர்களுக்கு இப்படி பொய் பரப்புவது தான் வேலை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications