அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்!
இந்திய ஏற்றுமதி துறைக்கு புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR), இந்தியாவில் 'கட்டாய உழைப்பு' (Forced-labour) முறைகள் தடுக்கப்படவில்லை எனக் கூறி, இந்தியப் பொருட்களுக்குக் கூடுதலாக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை (Tariffs) விதிக்கப் பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் ஏற்கனவே போர் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், தற்போது வர்த்தக பிரச்சனையும் புதிதாக சேர உள்ளது. டிரம்ப் விதித்த ரெசிப்ரோக்கல் வரி ஏற்கனவே உலக நாடுகளையும், அமெரிக்க வர்த்தக சந்தையை புரட்டிப்போட்டு இருக்கும் வேளையில், தற்போதைய புதிய வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி வரி விதிப்பு முடிவு, இந்தியப் பொருளாதாரம், ஏற்றுமதித் துறை மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விரிவா பார்ப்போம்.
இந்தியப் பொருட்களின் விலை உயர்வு
அமெரிக்கா தற்போது விதிக்க திட்டமிட்டுள்ள கூடுதல் வரி காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் அசுர வேகத்தில் உயரும்.
சர்வதேசச் சந்தையில் ஒரு பொருளின் விலை அதிகரிக்கும் போது, அதன் விற்பனை தானாகவே வீழ்ச்சியடையும். குறிப்பாக, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளை விடவும், இந்தியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படும் சூழல் உருவாகும்.
இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து, மற்ற நாடுகளை நோக்கி நகரத் தொடங்கும், இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகத்தைப் பெருமளவில் பாதிக்கும்.
ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் வீழ்ச்சி
தமிழ்நாட்டின் திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு போன்ற 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்கள் அமெரிக்காவிற்கான ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியையே தங்களின் முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ளன.
அமெரிக்கா இந்த புதிய 12.5% கூடுதல் வரியை விதித்தால், திருப்பூரின் பின்னலாடைத் துறை மற்றும் கரூரின் வீட்டு உபயோக ஜவுளித் தொழில் கடுமையான நஷ்டத்தைச் சந்திக்கும்.
அமெரிக்கா செக்ஷன் 301 வரி விகிதத்தில் இருந்து ஓரளவு சலுகை அளிக்கும் வகையில் ஒரு பிரத்யேக ஜவுளி உள்கட்டமைப்பு வழிமுறையையும் (Textile mechanism) தற்போது முன்மொழிந்துள்ளது. இந்த விதி மூலம் ஆடைகளுக்கு ஓரளவிற்குச் சலுகை கிடைக்கும். ஆனால் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் உள்ளூர் நிறுவனங்களின் லாப வரம்பு (Profit margins) சுருங்கி, நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்படும்.
வேலைவாய்ப்புப் பறிபோகும் அபாயம்
இந்தியாவின் ஜவுளி, விவசாயம், மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்புத் துறைகளில் தான் கோடிக்கணக்கான எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்தால், நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு (Layoffs) நடவடிக்கைகளில் இறங்கும். இது மக்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும்.
வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒரு புதிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (Bilateral Trade Agreement) இறுதி செய்வதற்காக தற்போது டெல்லியில் தீவிரமாகப் பேசி வருகின்றன.
இத்தகைய சூழலில் அமெரிக்கா இந்த 'செக்ஷன் 301' (Section 301) வரி விதிப்பைக் கையில் எடுத்திருப்பது, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையை (Deadlock) உருவாக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவிடம் இருந்து இந்த வரி விதிப்பில் இருந்து முழு விலக்கு அல்லது நிவாரணம் பெறுவதே தற்போது இந்தியாவின் முதன்மை இலக்காக மாறியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கம்
இந்தியாவின் ஏற்றுமதி குறையும் போது, நாட்டிற்குள் வரும் அந்நியச் செலாவணியான அமெரிக்க டாலரின் வரத்து இயல்பாகவே குறையும். இது சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் (INR) மதிப்பை மேலும் பலவீனமடையச் செய்யும்.
உள்நாட்டு ரூபாய் மதிப்பு சரிந்தால், இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், தங்கம் போன்ற பொருட்களின் விலை உயர்ந்து, அதன் எதிரொலியாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்
அமெரிக்காவின் இந்த 10% - 12.5% புதிய வரி விதிப்புத் திட்டம் என்பது நேரடியாக இந்தியாவின் உற்பத்தித் தொழில்கள், ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் சாமானிய உழைக்கும் வர்க்கத்தை பாதிக்கும் ஒரு இக்கட்டான சவால். இதனால் மத்திய அரசு இந்தப் புகார்களைத் திட்டவட்டமாக மறுத்து, அமெரிக்காவுடன் மிகத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications