“விக்ரம் இப்போ வந்தே ஆகணும்”.. நிலாவை வேண்டியபடி பாலத்தில் போராட்டம் நடத்திய உ.பி. ரஜினிகாந்த்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ரஜினிகாந்த் எனும் பெயர் கொண்ட ஒருவர், விக்ரம் லேண்டரை இஸ்ரோ தொடர்பு கொள்ளும் வரை கீழே இறங்கமாட்டேன் என ஒரு புதிய ஆற்றுப்பாலத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
உலகையே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது சந்தியான் 2 விண்கலம். அதன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சமயத்தில், கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரஜினிகாந்த் எனும் நபர். இரு தினங்களுக்கு முன்பு யமுனை ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பாலத்தின் மீது தேசியக் கொடியுடன் ஏறிவிட்டார். விக்ரம் லேண்டரை இஸ்ரோ தொடர்பு கொள்ளும் வரை தான் கீழே இறங்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.
நிலா கடவுளை தான் வேண்டியபடி இருப்பேன் என ஒரு துண்டு காகிதத்தின் மூலம் கீழே சூழ்ந்திருந்த மக்களுக்கு அவர் செய்தி அனுப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் பல மணி நேரம் போராடி ஒருவழியாக ரஜினிகாந்தை போலீசார் கீழே இறக்கினர்.
பாலத்தின் மீது ஏறி போராட்டம் செய்வது ரஜினிகாந்திற்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை. இதை அவர் பலமுறை செய்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி, அதே ஆற்றுப் பாலத்தின் மீது பிரச்சினை செய்திருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications