குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய 15 தொழிலாளர்கள்! உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். இந்த விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா மைன்ஸ், பில்லி மார்குண்டி கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. குவாரியில் உள்ள சுவர் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததே இந்த விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்து ஏற்பட்டிருப்பதையும், உள்ளே தொழிலாளர்கள் சிக்கியிருப்பதையும் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மிர்சாபூரில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியிருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான சஞ்சீவ் குமார் கோண்ட், மாவட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்படி, சுமார் 15 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இடிபாடுகளில் சிக்கியவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சிக்கியவர்களை மீட்பதிலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். சிக்கிய அனைவரையும் மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கோண்ட் கூறியிருக்கிறார். இந்தச் சுரங்கம் எந்த சூழ்நிலையில் செயல்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோண்ட் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், இந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இச்சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications