உத்தரகாண்ட் வாக்கெடுப்பு பார்வையாளராக நாடாளுமன்ற முதன்மை செயலர் ஜெய்தேவ்சிங் நியமனம்- சுப்ரீம்கோர்ட்
டெல்லி: உத்தரகாண்ட் சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு பார்வையாளராக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முதன்மை செயலர் ஜெய்தேவ் சிங்கை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருடன் உத்தரகாண்ட் மாநில சட்டசபை செயலரும் நாளைய வாக்கெடுப்பை கண்காணிப்பர் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஹரீஷ் ராவத் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நைனிடால் உயர்நீதிமன்றம், ஜனாதிபதி ஆட்சிக்கு இடைக்கால தடை விதித்தது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணையில் உத்தரகாண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் உத்தரகாண்ட் சட்டசபையில் நாளை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டது.

தலைமை தேர்தல் ஆணையர்
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஒருவரை நியமிக்கலாம் என முந்தைய விசாரணையின் போது மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்ற முதன்மை செயலர்
அதில் உத்தரகாண்ட் சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு பார்வையாளராக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முதன்மை செயலரை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனுமீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.

உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இந்த விசாரணையின் முடிவில் உத்தரகாண்ட் சட்டசபையில் நாளை திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடைபெறும்; நாடாளுமன்ற முதன்மை செயலர் ஜெய்தேவ்சிங்கை இந்த வாக்கெடுப்புக்கான கண்காணிப்பாளராக செயல்படுவார்; அவருடன் உத்தரகாண்ட் சட்டசபை செயலரும் வாக்கெடுப்பை கண்காணிப்பர் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications