டெங்கு காய்ச்சலா..பாராசிட்டமல் போடுங்க..உத்தரகாண்ட் முதல்வரின் அலட்சியம்
டேராடூன்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 650 கிராம் பாராசிட்டமல் மாத்திரை எடுத்துக்கொண்டால் போதுமானது என்றும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அலட்சியப் பேச்சு அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், அரசு போதிய முன்னெசரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பாதிப்பு குறைவாக உள்ளதாக கூறிய உத்தரகாண்ட் முதல்வர், டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார். நலம் விசாரித்ததோடு அவர் வந்திருந்தால் பரவாயில்லை, கூடவே ஆலோசனை ஒன்றையும் அவர் கூறியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
500 கிராம் பாராசிட்டமல் மாத்திரைக்கு பதில் 650 கிராம் பாராசிட்டமல் மாத்திரையை எடுத்துக்கொண்டு, ஓய்வெடுத்தால் போதும் டெங்கு காய்ச்சல் ஓடிவிடும் எனக் கூறியிருக்கிறார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் முறையான சிகிச்சைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிவரும் நிலையில் அவர் இப்படி பேசியிருக்கிறார்.
இதே முதலமைச்சர் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பசுமாட்டிலிருந்து காற்றுப்பிரியும் போது அங்கு நின்று சுவாசித்தால் சுவாசக்கோளாறு சீராகும் என கருத்து தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications