உத்தரகாண்ட் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஹைகோர்ட் அதிரடி தடை!!
நைனிடால்: உத்தரகாண்ட் சட்டசபையில் காங். முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்த ஒருநபர் பெஞ்ச் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இடைக்கால தடை விதித்துள்ளது.
உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் ஹரீஷ் ராவத் முதல்வராக இருந்து வந்தார். 70 எம்.எல்.ஏ.க்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36; பா.ஜ.க.வுக்கு 28 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். மேலும் முற்போக்கு ஜனநாயக முன்னணியின் 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர்.

கடந்த 18-ந்தேதி ஆளும் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து, மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். பின்னர் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்த அவர்கள், மாநில அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அரசை டிஸ்மிஸ் செய்யுமாறும் வலியுறுத்தினர்.
இதனிடையே மாநில அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினார். அதில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், 28-ந்தேதி சட்டசபையில் அமளி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஹரீஷ் ராவத் தொடர்ந்த வழக்கில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி யு.சி.தியானியை கொண்ட ஒருநபர் பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது. மேலும் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 3 நாள் தடை விதிக்க கோரினார். மேலும் தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது; ஆகையால் எந்த ஒரு அரசும் இல்லை. அதாவது சட்டசபை வெற்று கட்டிடத்தில் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒருநபர் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் பெஞ்ச் இடைக்கால தடை விதித்தனர். மேலும் ஹரீஷ் ராவத் மற்றும் மத்திய அரசு பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஏப்ரல் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications