கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள்..5% சிறப்பு இடஒதுக்கீடு, ஊக்கதொகையை அறிவித்த உத்தரகண்ட் அரசு
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மாநில வேலைவாய்ப்பில் 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் திரத்சிங் ராவத் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை அதிகமாக உள்ளது.
குறிப்பாக கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தினசரி கொரோனா உயிரிழப்புகள் 4000 வரை சென்றது.

பெற்றோரை இழக்கும் குழந்தைகள்
கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பல மாநில அரசுகளும் கையில் எடுத்துள்ளன. பல்வேறு மாநில அரசுகளும் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன

மற்ற மாநிலங்கள்
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகச் செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது,

உத்தரண்ட் அரசு
இந்நிலையில், உத்தரகண்ட் அரசு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 21 வயதாகும் வரை குழந்தைகளின் பராமரிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி ஆகியவற்றை மாநில அரசு செய்யும். மேலும், அவர்களுக்கு மாதம்தோறும் மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சிறப்பு இட ஒதுக்கீடு
குழந்தைகள் வளரும் வரை பெற்றோரின் சொத்துகளை மற்றவர்கள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மாவட்ட மாஜிஸ்திரேட் கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்கப்படும் என்றும் உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications