8-10 ராணுவ வீரர்கள் திடீர் மாயம்.. உத்தரகாண்ட் மேகவெடிப்பு - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சோகம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தாரலி கிராமத்தில் இன்று திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. மண், பாறைகளை சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் தாரலி கிராமம் அடித்து செல்லப்பட்டது. ஏற்பட்டது. இதில் 50க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் ராணுவ முகாமும் பாதிக்கப்பட்டுள்ளது. 8 முதல் 10 ராணுவ வீரர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை கொட்டி வருகிறது. உத்தரகாசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது.

இன்று மதியம் சுமார் 1.45 மணியளவில் தாரலி கிராமத்தில் கனமழை பெய்தது. திடீர் மேகவெடிப்பால் குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்டியது. அதேபோல் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மண், பாறைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டன. தாரலி கிராமத்தில் உள்ள வீடு, கடைகள் மீது பாறை, மண்ணை அடித்து வந்த வெள்ளம் அதிவேகமாக மோதியது.
இதில் பல வீடுகள், கடைகள் அடித்து செல்லப்பட்டன. 4 பேர் பலியான நிலையில் 50க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராணுவ முகாமும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஹர்சில் என்ற இடத்தில் நம் நாட்டின் ராணுவ முகாம் உள்ளது. மேகவெடிப்பால் கொட்டிய திடீர் மழை மற்றும் நிலச்சரிவால் பாறை, மண்ணை அடித்து கொண்டு வந்த வெள்ளம் ராணுவ முகாமில் பாய்ந்தது.
இதில் 8 முதல் 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பிரிகேடியர் கமாண்டர் மந்தீப் தில்லான் கூறுகையில், ‛‛தாரலி கிராமத்தில் நிலச்சரிவு மதியம் 1.45 மணிக்கு நிகழ்ந்தது. இது ஹர்சில் எனும் பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அடுத்த 10 நிமிடத்தில் 150 ராணுவ வீரர்கள் விரைந்து சென்ற சம்பவ இடத்தில் மீட்பு பணியை தொடங்கினர். தற்போது வரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஹர்சில் பகுதியில் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ராணுவ முகாம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களை காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்'' என்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமாகி உள்ள பொதுமக்கள், ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications