மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கறுப்புக் கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம்
திருப்பதி: பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும், அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நேற்று திருப்பதி வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய மதிமுக, த.வா.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய ஆந்திர போலீசார், அவர்களைக் கைதும் செய்தனர்.

இந்த சம்பவத்தைப் படம் பிடிப்பதற்காக சென்ற தமிழக செய்தியாளர்களைத் தாக்கிய ஆந்திர போலீசார், கேமரா, செல்போன் உள்ளிட்ட அவர்களின் உபகரணங்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், 10க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் வனப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர்.
இந்நிலையில், ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ கூறியதாவது :-
முன்பு ராஜபக்சேவுக்கு மட்டும் தான் கறுப்புக் கொடி காட்டுவோம் எனக் கூறி இருந்தோம். காரணம் அப்போது நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தோம். ஆனால், தற்போது அப்படியில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். தன்மானத்தோடு வாழ்கிறோம்.
இப்போது கூறுகிறேன், ராஜபக்சேவை ஆதரிக்கும் பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என் தலைமையில் அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications