பெரும் கூட்டத்துடன் திரண்ட வாட்டாள் நாகராஜ்.. விதான சவுதா முன்பு முற்றுகை #cauvery
பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஏராளமானோர் கர்நாடக மாநில சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மண்டியா, ராம்நகர், சாம்ராஜ் நகர், மைசூரு, குடகு, கொப்பல் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கன்னட அமைப்பினரும், விவசாய சங்கங்களும் தமிழகத்தை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 8 நாட்களாகவே இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது.
விவசாயிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் இறங்கி போராடுவதை தடுக்கும் வகையில் மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய உள்ளிட்ட முக்கிய அணைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக மாணவர் ஒருவர் கர்நாடகாவில் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. வாகனத்தில் வந்தவர்களும் தாக்கப்பட்டனர்.
சென்னையிலும் கர்நாடகாவைச் சேர்ந்த ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பதற்றம் அதிகரித்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ், இன்று கர்நாடக சட்டசபையான விதான் சவுதா முன்பு ஏராளமான கன்னட ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து வரும் 15ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்கு ஆதரவு தெரிவித்து 700க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் பங்கேற்கும் அறிவித்திருந்தார் வாட்டாள் நாகராஜ். இந்த நிலையில் இன்று நடத்தி வரும் திடீர் போராட்டம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications