வெண்மைப் புரட்சி நாயகனை அவமதிக்கும் குஜராத் பாஜக.. வேடிக்கை பார்க்கும் தலைமை!
Recommended Video

காந்தி நகர்: இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட நாயகரான வர்கீஸ் குரியன் காலமாகி இத்தனை ஆண்டுகள் கழித்து அவருக்கு பெருத்த அவமானம் தேடி வந்துள்ளது. அதுவும் அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்த குஜராத்திலிருந்து. அதுவும் பாஜகவிலிருந்து. ஆனால் பாஜக தலைமை இதை கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, கொஞ்சம் கூட கண்டிக்காமல்.
இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன். அதேபோல வெண்மைப் புரட்சியின் தந்தையாக அறியப்படுபவர் மறைந்த வர்கீஸ் குரியன். இந்தியா, பால் உற்பத்தியில் சுய சார்பை எட்ட முதல் முழுக் காரணம் இவர்தான். இந்தியா பால் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடிக்க முக்கியக் காரணமே குரியனின் வெண்மைப் புரட்சிதான்.
குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமுல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலம் இருந்தவர் குரியன். நாட்டின் மற்ற பகுதியினரை விட குஜராத் மக்கள்தான் குரியனுக்கு மிகப் பெரிய அளவில் கடமைப்பட்டுள்ளனர். ஆனால் குரியனை தற்போது அவமதித்துப் பேசியுள்ளார் குஜராத் பாஜக தலைவர் ஒருவர். வர்கீஸன் குரியன் மதமாற்றத்துக்கு நிதியுதவி செய்தார் என குஜராத் பாஜக அமைச்சர் திலீப் சங்கானி கூறியுள்ளார்.

இதுதான் குற்றச்சாட்டு
சங்கானி கூறுகையில், அமுல் நிறுவனத்தை உருவாக்கியவர் திரிபுவன்தாஸ் படேல். ஆனால் அது யாருக்கும் தெரியவில்லை. நாட்டுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் மதமாற்றத்திற்கு வித்திட்டவரான குரியன் பெயரைத்தான் தெரிகிறது.

நிதியை தவறாக பயன்படுத்தினார்
அமுல் நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது அதன் நிதியை தவறாக மதமாற்றத்திற்கு திருப்பி விட்டார். தெற்கு குஜராத்தில் உள்ள பழங்குடியின மக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் பணிக்கு நிதியுதவி செய்தார். அத்தனை பணமும் குஜராத் விவசாயிகளின் பணமாகும் என்று கூறியுள்ளார் சிங்கானி.

சர்ச்சைப் பேச்சு
குஜராத்தை வளம் மிக்கதாக மாற்றியதில் முக்கியப் பங்கு குரியனுக்கும் உண்டு. அந்த மாநில விவசாயிகள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளனர். ஆனால் குஜராத் அமைச்சர் சங்கானி இப்படி ஒரு புகாரைக் கூறியிருப்பது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அமுல் நிறுவன தலைவர் டாக்டர் ஆர்.எஸ். சோதி இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமுல் தலைவர் திட்டவட்ட மறுப்பு
சோதி கூறுகையில், ஒவ்வொரு விவசாயியும் என்ன மதமோ அதுதான் குரியனுடைய மதமும். அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் மரணமடைந்தபோது அவரை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தாரிடம் கேட்டபோது தன்னை எரிக்க வேண்டும் என்பதை குரியனுடைய கடைசி ஆசை என்று கூறி எங்களை வியப்படைய வைத்தனர். அதுதான் குரியன். திரிபுவன்தாஸ் படேல் எங்கு தகனம் செய்யப்பட்டாரோ அதே இடத்தில்தான் குரியனும் தகனம் செய்யப்பட்டார். குரியனுடைய மனைவியும் கூட மரணத்திற்குப் பின்னர் தகனம்தான் செய்யப்பட்டார் என்றார் சோதி.

மகள் வருத்தம்
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு குரியனின் மகள் நிர்மலாவும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எனது தந்தை பிறப்பில் கிறிஸ்தவராக இருந்தாலும் கூட நாத்திகராகவே வாழ்ந்தவர். தனது மரணத்திற்குப் பின்னர் தன்னை அடக்கம் செய்யக் கூடாது, தகனம் செய்ய வேண்டும் என்றுதான் கூறினார். அவர் மீதான புகாரை நிராகரிக்க வேண்டும். வர்கீஸ் குரியன் எழுப்பிய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றார் நிர்மலா.

பாஜக மெளனம் ஏன்
குரியன் மீதான பாஜக அமைச்சரின் இந்த சர்ச்சை குறித்து பிரதமர் மோடியோ, பாஜக தலைமையோ எந்தக் கருத்தும் கூறாமல் அமைதி காத்து வருவது வியப்படைய வைத்துள்ளது. குரியனின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலான இந்தப் புகார் குறித்து பாஜக தலைமை உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும், அமைச்சர் சிங்கானியை கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications