தமிழகம், புதுவையில் இன்று முதல் நவ.2 வரை மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video
டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாக ஒரு வாரம் கழித்து தொடங்கியுள்ளது.
இருப்பினும் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவிலேயே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்றும் நாளையும் கனமழை
வங்கக்கடலின் தென்மேற்கில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
மேலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக கனமழை பெய்யும்
அதாவது 30ஆம் தேதியான இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையிலிருந்து மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை, நாளை மறுநாள் கனமழை
அக்டோபர் 31ஆம் தேதியான நாளை தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூன்றாம் நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்துவாங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
5 நாட்களுக்கு வெளுக்கும்
நான்காம் நாளான நவம்பர் 2ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் நாளான நவம்பர் 3ஆம் தேதியும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.