அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக வி.ஹெச்.பி. இன்று முக்கிய முடிவு?
பைசாபாத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக முக்கிய முடிவெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று கூட்டியுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைத்தது முதல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்களும் இதனை அவ்வப்போது தெரிவித்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி கூறுகையில், இன்றைய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கூட்டத்தின் முடிவில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
இந்தக் கூட்டத்துக்கு ராமர் கோவில் விவகாரக் குழுவின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைமை வகிக்கிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா உள்ளிட்டோரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.