உலக யோகா தின நிகழ்ச்சி: அழைப்பு நிராகரிக்கப்பட்ட ஹமீத் அன்சாரியிடம் மன்னிப்பு கோரியது மத்திய அரசு..
டெல்லி : நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பபட்ட விவகாரத்தில் மத்திய அரசு மன்னிப்பு கேட்டு பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
பா.ஜ.க- வின் மூத்த தலைவர் ராம் மாதேவ், உலக யோகா தின நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்து கொள்ளாதது பற்றி ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் உலக யோகா தின நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்படவில்லை என்றும், முறையாக அழைக்கப்பட்டால் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை எனவும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், அன்சாரி புறக்கணிக்கப்பட்டதன் மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய இயற்கை மருத்துவத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதேவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.