விஜய் மல்லையா கர்நாடக மண்ணின் மகன், எங்கும் ஓடிப்போகவில்லை: கொதிக்கும் தேவகவுடா
பெங்களூர்: விஜய் மல்லையா கர்நாடக மண்ணின் மகன், அவர் நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்தார்.
வங்கிகளில் கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் மல்லையா, வெளிநாட்டுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். அவர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவரும் நிலையில், ஒரு தொழிலபர் என்ற முறையில் வெளிநாடு வந்துள்ளதாக மல்லையா தனது டிவிட்டர் அக்கவுண்ட் மூலமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மல்லையா குறிவைக்கப்படுவதாக கொதித்துள்ளார் தேவகவுடா. இதுபற்றி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தேவகவுடா அளித்த பேட்டியில், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு, விஜய் மல்லையா ஏற்கனவே பதிலளித்துவிட்டார்.
மல்லையா, கர்நாடக மண்ணின் மகன். நாட்டைவிட்டு அவர் எங்கும் ஓடவில்லை. இப்போதெல்லாம், ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவது சாதாரண விஷயம். மல்லையாவை குறிவைத்து பிரச்சினை கிளப்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதும், 2010 ராஜ்யசபா இடைத்தேர்தலின்போது, மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எம்.பியாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.