கடன் ஏய்ப்பாளராக அறிவித்த வங்கிக்கு எதிராக வழக்கு! விஜய் மல்லையா ஆவேசம்
கடன் ஏய்ப்பாளர் என தன்னை, யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்ததை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக "கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத் தலைவரும், மது உற்பத்தி தொழிலதிபருமான விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையாவால் துவக்கப்பட்ட "கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், 2012ல் மூடப்பட்டது. முன்னதாக, அந்த நிறுவனம், யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் கடன் பெற்றிருந்தது. எனினும், அந்த நிறுவனத்தால் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை.

கடன் ஏய்ப்பாளர்கள்
இதைத் தொடர்ந்து, "கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தையும் அதன் தலைவர் விஜய் மல்லையா, இயக்குநர்கள் ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ் குப்தே ஆகிய நான்கு பேரையும் கடன் ஏய்ப்பாளர்களாக யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் குறைதீர்ப்புக் குழு (ஜி.ஆர்.பி.) சமீபத்தில் அறிவித்தது.

கருத்தை கேட்கவில்லை
இந்நிலையில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த விஜய் மல்லையாவிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "கடன் விவகாரத்தில் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பே தரப்படவில்லை. நாங்கள் யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் முன்பு ஆஜராகவும் அழைக்கப்படவில்லை. கடன் ஏய்ப்பாளர்கள் என்று எங்களை அறிவித்ததை நாங்கள் ஏற்கவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளோம்" என்றார்.

கடன் வாங்கும் தகுதியை இழக்கும்
விஜய் மல்லையாவை, கடன் ஏய்ப்பாளராக அறிவித்துள்ள தகவலை மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆகியவற்றுக்கு யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், கிங் ஃபிஷர்' நிறுவனம், அந்த வங்கியில் இனிமேல் கடன் வாங்கும் தகுதியை இழக்கிறது.

வழக்கு போட முடியும்
மேலும், வரி ஏய்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய்மல்லையா உள்ளிட்டோரும் கடன் வாங்கும் தகுதியை இழப்பதுடன், எந்தவொரு நிறுவனத்திலும் இயங்குநர் அளவிலான பதவிகளை வகிக்கும் தகுதியையும் இழக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications